இலட்சிய வேட்கை
மனிதராய் பிறந்திட்ட ஒவொருவருக்கும்
மனத்தினில் பற்பல ஆசையுண்டு
மனிதராய் வாழ்ந்திடும் ஆசைகள் விட்டு -சிலர்
மாபெரும் அரக்கராய் வாழ்வதும் உண்டு !
ஆம்,
பெரும் பொருள் ஈட்டுதல் சிலருக்கு ஆசை
பெருமைகள் பேசுதல் சிலருக்கு ஆசை
பெரியோரை என்றென்றும் அவமதித்து
பெரும் பித்தராய் திரிவதில் சிலருக்கு ஆசை !
வரதட்சணை வாங்கிட சிலருக்கு ஆசை
வறியோரை வதைத்திடல் சிலருக்கு ஆசை
வன்முறை செய்வதில் சிலருக்கு ஆசை -தான் மட்டும்
வளமாக வாழ்ந்திட சிலருக்கு ஆசை !
பொய் மட்டும் பேசிட சிலருக்கு ஆசை
பொறாமை கொள்வதில் சிலருக்கு ஆசை
பொறுமையைத் தொலைப்பதில் சிலருக்கு ஆசை
பொறுப்பினை மறப்பதே சிலருக்கு ஆசை !
அதிகாரம் செய்வதில் சிலருக்கு ஆசை
அடங்கிப் போவதே சிலருக்கு ஆசை
அசிங்கங்கள் செய்வதில் சிலருக்கு ஆசை
அர்த்த மில்லாமல் வாழ்வதில் ஆசை !!
சிலர்...
மனித நேயத்தை விட்டுவிட்டு
மதங்களைச் சொல்லி ஆட்டி வைப்பார்
மாண்புகள் எல்லாம் விட்டுவிட்டு -தன்னை
மாபெரும் மனிதரென சொல்லிக் கொள்வார் !
சாதியின் பெயரைச் சொல்லிக்கொண்டு
சாதியைத் தான்தான் காப்பதுபோல்
சாக்கடைச் சண்டைகள் செய்து தினம்
சாதனை செய்வதாய் பீற்றிக் கொள்வார் !
ஏழையாய் இருந்தால் ஒரு சாதி !
ஏற்றம் பெற்றால் ஒரு சாதி (!!)
ஏனோ அதனை நாம் மறந்து -இன்னும்
எதனாலோ சண்டை செய்கின்றோம் ..(!) ?
வேட்கை நமக்கு இருந்திட வேண்டும்
வேற்றுமை நீங்கி வாழ்ந்திட வேண்டும்
வேதங்கள் சொன்ன வழியில் நாமும் -இனி
வெற்றி முழக்கம் செய்திட வேண்டும் !
மதவெறி தொலைத்திட வேட்கை வேண்டும்
மகத்தான தொண்டுகள் செய்திட வேண்டும்
மனிதனை மனிதனாய் மதித்திடும் செயலே
மனத்தினில் என்றும் நிலைத்திட் வேண்டும் !!
அன்னையிடம் வேண்டல் !
பண்பாடு காத்திடும்
பாரதத் திருநாட்டின்
ஜனநாயகம் என்றும் நிலைத்திடவும்
மனிதத் தன்மைகள்
வற்றாது என்றும்
மனிதங்கள் இங்கே வளர்ந்திடவும்
வளமைகள் பெருகிட
ஓடிடும் நதிகளை
ஓரிடம் நிறுத்தாது
ஒன்றாக விரைவில் இணைத்திடவும்
கல்வியும் தொழிலும்
காண்போர் வியந்திட
இன்னும் இன்னும் உயர்ந்திடவும்
பாரத அன்னையே
பணிவுடன் உந்தன்
பாதங்கள் தொழுது
வேண்டுகிறேன் -என்றும்
இலட்சியம் உன்னை வேண்டுகிறேன் !
No comments:
Post a Comment