உன்னையே நீ அறிவாய் !!
அறிந்திட வேண்டும் ...
மனிதா அறிந்திட வேண்டும் ..!
அறிந்திட வேண்டும்...
உன்னை அறிந்திட வேண்டும்....!
உன்னையே நீ யாரெனத்தான் அறிந்திட வேண்டும்...
உண்மையான உள்ளத்தை நீ காட்டிட வேண்டும் ...!
அறிந்திட வேண்டும் அறிந்திட வேண்டும்
அறிந்திட வேண்டும் உன்னை அறிந்திட வேண்டும் !!
மனத்தினிலே நல்லதையே நினைத்திட வேண்டும்
மக்களெல்லாம் நம்மவர்கள் என்றிட வேண்டும்
மனிதனையே மதித்திடவே தெரிந்திட வேண்டும்
மதவெறியை மாய்த்திடவே எழுந்திட வேண்டும் !!
ஊமைச் சிறுவன்கூட நேசத்தோடு வாழ்கிறான்
ஊன்றுகோலாய் மக்களுக்கு உதவி செய்கிறான்
ஊருக்குள்ளே சண்டைதானே வேண்டாம் என்கிறான்
உறுதிகொண்டு உண்மையாகத் தானுழைக்கிறான் !!
எல்லாருக்கும் ரத்தமென்பது சிகப்புத் தானடா
என் வியர்வை உன் வியர்வை உப்புத்தானடா
எங்கு நோக்கினும் வெடி குண்டுகள் வெடிப்பதேனடா ?
ஏதுமறியா மக்களைக் கொன்று குவிப்பதேனடா ?
பயங்கர வாதமெல்லாம் நின்றுவிட்டாலே
பண்புமிக்க மனிதனாக உயர்ந்துவிட்டாலே
பாரதத்தின் சிறப்புமிக்க மூவண்ணக்கொடி
பாரெலாமே வியந்திடவே பறந்திடுந்தானே !!
யுத்தம் வேண்டாம் !!
யாரா யிருந்தாலும்
யுத்தம் வேண்டாங்க
எவரா இருந்தாலும் - நாம்
பேசித் தீர்ப்போங்க !
யாரும் யாருக்கும்
அடிமை இல்லீங்க
யாரை யாரு அதிகாரம்
செய்வது முறையாங்க ?
நீயா நானா பெரியவரென்ற
போட்டி வேணாங்க
நியாயம் எதுவோ அதற்குத்தானே
தலைதான் வணங்குங்க !
நிற்கதியாக நிற்கும் கோடி
மக்கள் பாருங்க
நிமிர்ந்திட வேண்டும் உங்கள் நாடு
என்றே உழைத்திடுங்க !
உங்கள் வீரம் காட்டிட நீங்கள்
உயிர்ப்பலி செய்யாதீங்க
உலகம் அமைதி காணவே நீங்கள்
உயர்வாய் எண்ணுங்க !!
No comments:
Post a Comment