Tuesday, August 31, 2010

இறைவன் இருக்கின்றான் !

இறைவன் என்பவன் இருக்கின்றானடா
இதயமுள்ள மனிதனோடு வாழ்கின்றானடா
மனிதன் என்பவன் இருக்கின்றானடா
மனதில் கருணை உள்ளவனே மனிதன தானடா !

மனிதன் என்பவன் என்ன சொல்கிறான்...?
உண்மை மனிதன் என்பவன் என்ன சொல்கிறான்...?
மனிதத் தன்மை உள்ளவன் என்ன சொல்கிறான் ...?
மதிப்பு மிகுந்த மனிதனே என்ன சொல்கிறான்...?             
            என்ன சொல்கிறான்...? என்ன சொல்கிறான்...?

சாதி இல்லை மதமுமில்லை ஒன்றுமில்லையே
சண்டை செய்யும் யாரும் எனக்கு உறவு இல்லையே
சமயமென்னும் பேரைச் சொல்லி சங்கடம் செய்து
சதிகள் செய்யும் யாரும் எனக்கு தேவையில்லையே !    (தேவை...)

சாமி என்று சொல்வதிலே தவறு இல்லையே -அந்த
சாமி பேரில் கலகம் செய்தல் முறையுமில்லையே !
ஆசாமிகள் புனிதங்களை கேடுத்திடலாமா... ?-அதற்கு
ஆமாம் சாமி போட்டுக்கிட்டு உடன்படலாமா...?          (உடன்...)

சாதி வெறியில் வீழ்ந்திடாமல் எழுந்து நில்லடா -அந்த
சாக்கடையில் வீழ்ந்துவிட்டால் நாற்றம் தானடா !  
சிந்தனைகள் செய்திடவே வேண்டும் நீயடா-நல்ல
சாதனைகள் செய்து தினம் உயர்ந்து செல்லடா !!          (உயர்ந்து...)

பார் போற்றும் எங்கள் பாரத நாடு !

பாருக்குள் உயர்ந்தது எங்கள் நாடு
பார் போற்றும் பைந்தமிழர் வாழும் நாடு
பசுமையாய் பயிர்கள் தழைத்த நாடு-எங்கள் 
பாரத நாட்டுக்கு ஏதிங்கு ஈடு ! (?)

தித்திக்கும் தேன் தமிழ் தோன்றிய நாடு
திவ்விய தெலுங்கினை போற்றிடும் நாடு
தெள்ளிய கன்னட மொழி பாடும் நாடு
தேமதுரமாய் மலையாளம் பாடிடும் நாடு !

இந்தியும் குஜராத்தி வங்காளியும்
அஸ்ஸாமி பஞ்சாபி பீகாரியும் இன்னும்
எத்தனை மொழிகளோ பேசும் நாடு
என்றாலும் இங்கில்லை வேறுபாடு !   

இந்து இஸ்லாம் கிறித்து மதம்
இன்னும் எத்தனை மதங்களிருந்த போதும்
இனிமையாய் ஏற்றது சம்மதமே -ஆம்
எல்லோரும் இங்கே ஓர் குலமே !

வடக்கென்றும் தெற்க்கென்றும் இருந்த போதும்
வாழ்வதில் எல்லோரும் இந்தியர்தான் !
அத்தனை பேர்களும் சேர்ந்தோம்  ஒன்று
அதனாலே வியக்குது அகிலம் இன்று !!

Sunday, August 29, 2010

"நல்லிணக்கம் போற்றுவோம்" எனும் எனது நூலிலிருந்து ....
இலட்சியம் சிதம்பரம்.
 


வேண்டுகிறேன்

அன்னையே ஆதி பராசக்தியே
அல்லாவே எல்லாம் ஆனவரே
அன்பான எங்கள் ஏசுநாதரே
அஹிம்சையை போதித்த புத்த(ர்)பிரானே
அபிலாசைகள் துறந்திட்ட மகாவீரரே
அகங்களில் நிறைந்திட்ட சீக்கிய குருவே
அமைதியே உலகெலாம் நிலவிடத்தானே -என்றும் 
அருள்தர இலட்சியம் வேண்டுகிறேன்.

நல்லிணக்கம்

இறைவனை நினைப்பது ஒரு நல்லிணக்கம்
அவரவர் மனத்தில் அவரவர் இறைவனை 
அவரவர் முறைப்படி அவரவர் நினைத்தால்
அனைவருக்கும் அது சிறந்த நல்லிணக்கம் !

எம்மொழி எனக்கு உயர்வென்பதும்
எம்மதம் எனக்கு உயர்வென்பதும்
எம்மவர் எனக்கு உயர்வென்பதும்
எண்ணுதல் என்றும் தவறு அல்ல !

எம்முடை(யது) மட்டுமே உயர்வென எண்ணி
எதிரியாய் பிறரைத   தான் நினைத்து
எவரது உணர்வையும் புண்படுத்த
எத்தனித்தால் அது இணக்கமல்ல !

எத்தனை மதமும் எத்தனை சாதியும்
எத்தனை மொழியும் எத்தனை இறைவனும்
எத்தனை இங்கே இருந்தாலும்- நாங்கள்
எல்லோரும் இந்தியர் என்பதே நல்லிணக்கம் !!

மரபு

மரபினை மறக்காது இருப்பது மரபு
மறந்தால் நோகும் என்மன உணர்வு
மனத்தினில் ஒன்றினை நான் நினைத்து
மறந்தும் மற்றதை எழுதாது என் மரபு !

இலக்கணம் எல்லாம் எனக்கு தெரியும் ..(!)
இலக்கியம் எல்லாம் எனக்கு தெரியும் ..(!)
இப்படியெல்லாம் எதையேனும் சொல்லி
இருப்போரை ஏமாற்றல் எந்தன் மரபு அல்ல !!  

நல்லவர்கள் வாழ்த்த வேண்டும் !

அன்பு என்னும் அறவழியை ஏந்திட வேண்டும்
ஆயுளெல்லாம் நிம்மதியாய் இருந்திட வேண்டும்
ஆர்ப்பாட்டம் அத்தனையும் விட்டிட வேண்டும்
ஆடிப்பாடி அகமகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் !

ஆசைப்பட்டு தீயவழியில் சென்றிட வேண்டாம்
ஆனந்தங்கள் அத்தனையும் தொலைத்திட வேண்டாம்
ஆனந்தமாய் வாழ்ந்திடவே வேண்டுமென்று நீ
ஆ(யா)ரையேனும் துன்புறுத்த நினைத்திட வேண்டாம் !

நாணயமாய் நடந்திடவே முயன்றிட வேண்டும்
நாலுகாசு நேர்மையாக சேர்த்திட வேண்டும்
நாட்டுப்பற்றை மனத்தினிலே வளர்த்திட வேண்டும்
நாடுயர்ந்தால் நாமுயர்வோம் என நினைத்திட வேண்டும் !

நல்ல நல்ல காரியந்தான் செய்திட வேண்டும்     
நலம் கிடைக்க அனைவருக்கும் உதவிட வேண்டும்
நல்லிணக்க வழியினிலே சென்றிட வேண்டும் -என்றும்
நல்லவர்கள் வாழ்த்தும்படி வாழ்ந்திட வேண்டும் !!

தேசியக் கொடியை
வணங்குகிறோம்
!!

வணங்குகிறோம்
கொடியை வணங்குகிறோம்
இந்திய தேசிய
கொடியை வணகுகிறோம் !

தியாகத்தை நினைவூட்டும் காவி நிறம் ,
வெள்ளை உள்ளத்தை வெளிக்காட்டும்
வெண்மை நிறம் ;
பசுமையும் வளமையும் செழுமையும்
காட்டும் பச்சை நிறம் ;

தருமச் சக்கரத்தை நடுவில் ஏந்தி
கம்பீரமாக உயர்ந்து பறக்கும்
எங்கள் இந்திய தேசிய
மூவண்ணக் கொடியை வணங்குகிறோம் !!

இந்தியத் திருநாட்டின் உயிர் நாடியாம்
உழவுத் தொழிலின் மேன்மையைச் சொல்லும்
எங்கள் இந்திய தேசிய
கொடியை வணங்குகிறோம் !

அன்னையே பாரத அன்னையே -நீ   
உயர்த்திப் பிடித்திருக்கும்
இந்திய தேசியக்    
கொடி உயர்ந்திடத்தானே  
எழுச்சி முழக்கமிட்டு வணங்குகிறோம் !-மிகுந்த
பணிவுடன் உன்னை வணங்குகிறோம் !!

சுதந்திரம் ! சுதந்திரம் !!

உரிமை தந்த சுதந்திரம்
உயர வைத்த சுதந்திரம்
உண்மையான சுதந்திரம்
உள்ளம் நிறைந்த சுதந்திரம் !!
      சுதந்திரம் !சுதந்திரம் !!
      சுதந்திரம் !சுதந்திரம் !!

கொள்ளையடித்த வெள்ளையரை 
விரட்டியடித்த சுதந்திரம் !
கொள்கை மிக்க தலைவரெல்லாம்
வாங்கித் தந்த சுதந்திரம் !
      சுதந்திரம் !சுதந்திரம்!!
      சுதந்திரம் !சுதந்திரம் !!

எல்லா மக்களும் எல்லா வளமும்
பெற்றிட வாங்கிய சுதந்திரம் !
எத்தனை மதங்கள் இருந்தபோதும்
இந்தியரான சுதந்திரம் !!
      சுதந்திரம் !சுதந்திரம் !!
      சுதந்திரம் !சுதந்திரம் !!

எல்லை வந்து தொல்லை தந்தால்
விரட்டியடிக்கும்   சுதந்திரம் !
எங்கள் நாடு  இந்திய  நாடு
என்றே சொல்லும் சுதந்திரம் !!
      சுதந்திரம் ! சுதந்திரம் !!
      சுதந்திரம் ! சுதந்திரம் !!

Tuesday, August 17, 2010

நம் இந்திய சுதந்திரம் -2010

காந்தியடிகள் சொன்ன மந்திரம் ...
கருணையுள்ள அகிம்சை மந்திரம் !
தேசமெல்லாம் போற்றும் மந்திரம் ...
தேச மக்களையே இயக்கும் எந்திரம் !!

எத்தனைபேர் இரத்தம் சிந்தி வந்த சுதந்திரம் ...
எத்தனையோ தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் !!
ஏழைகளும் கோழைகளாய் ஆகிடாமலே -என்றும்
ஏற்றம் பெற எல்லோருக்கும் கிடைத்த சுதந்திரம் !!

         சுதந்திரம்!சுதந்திரம்!!சுதந்திரம்!!!
         சுதந்திரம்!சுதந்திரம்!!இனிய சுதந்திரம்!!!

வெள்ளையரை விரட்டியடித்து பெற்ற சுதந்திரம்
தொல்லை நீங்கி உரிமை காக்க வந்த சுதந்திரம்!-அதனால் ..
கொள்ளையடிக்க எவர்க்குமில்லை இங்கு சுதந்திரம் (!!)-நல்ல
கொள்கை வழியில் ஒன்றுபட்டு உயர சுதந்திரம் !!          (சுதந்திரம்...)

ஊழல்களை செய்பவர்கள் திருந்திட வேண்டும் ...
ஊதாறித்  தனங்களையே நிறுத்திட வேண்டும்!
ஊருலகம் போற்றிடவே நடந்திட வேண்டும் -தினம்   
ஊக்கமாக தானுழைத்து உயர்ந்திட வேண்டும் !!         (சுதந்திரம்...)

பண்பாடுகளை என்றும் நாமே காத்திட வேண்டும்
பயங்கர வாதங்களை விரட்டிட வேண்டும்!
பயமில்லாத அமைதி வாழ்க்கை நிலவிட வேண்டும்-நம்
பாரதத்தை உயர்த்தி நாமும் நிமிர்ந்திட வேண்டும் !!         (சுதந்திரம்...)

         சுதந்திரம்!சுதந்திரம்!!சுதந்திரம்!!!
         சுதந்திரம்!சுதந்திரம்!!இனிய சுதந்திரம்!!!