Friday, October 22, 2010

மாவீரன் நேதாஜி !

வெற்றி வெற்றி என்ற சொல்லை
விரதமாகக் கொண்டதாலே
தோல்வி என்ற வார்த்தைகளை
தோல்வியுறச் செய்தவன் !

காங்கிரசில் எத்தனையோ
கருத்து மோதல் இருந்தபோதும்
கவலையின்றி முழக்கமிட்டு
கம்பீரமாய் நின்றவன் !

ஜனநாயக நெறிமுறையை
அன்றைக்கே சொன்னவன் -ஆம்
ஜனநாயக வழியினிலே
வெற்றி முழக்கமிட்டவன் !

வெற்றி என்ற சொல்லை மட்டும்
விரதமாகக் கொண்டதாலே
தோல்வி என்ற வார்த்தைகளை
துடைத்தெறியச் செய்தவன் !

ஐ என் ஏ என்ற சொல்லால் 
ஆதிக்க வெறியர்களை 
ஆட்டம் காண வைத்திட்ட
ஆற்றல்மிகு தளபதியே !

ஆம் !
நேதாஜி என்று சொன்னால் 
வீரம்தான் நினைவில் வரும் 
உன் உருவத்தைப் பார்த்தாலே 
உணர்ச்சிகள்தான் பொங்கி வரும் !

எழுச்சிமிக்க இளைஞர்களை      
உருவாக்கித் தந்ததாலே
எழுச்சியோடு இன்னமுந்தான்
நெஞ்சமெல்லாம் வாழ்கிறார் !

சாதி மத  பேதங்களை
சாக்கடைக்குள் எரிந்ததாலே
சாகசங்கள் செய்து இன்னும்
சாதனையாய் நிற்கிறார் !

தேச விடுதலைக்கு குரல் கொடுத்து
போர் முழக்கம் செய்தபோது
மென்மையான பெண்களையும்
வீர முழக்கமிட வைத்தவர் !

ஜான்சிராணி படையினிலே
தளபதியாய் முழக்கமிட்ட
வீரத்தாய் லட்சுமிசேகல் 
வாழும் நாட்டில் வாழ்கிறோம் !

நேதாஜி ! நீ 
வெள்ளையனை மிரள வைத்த 
சிம்ம சொப்பனம் !
வேறுபாட்டை ஓட வைத்த 
எங்கள் தேச அர்ப்பணம் !!

உன் உரத்த வார்த்தையெல்லாம் 
இன்னும்   கேட்குது !
உந்தன் பேரைச் சொன்னாலே 
வீரம்   பிறக்குது !! 

தலைவா !
உங்களுக்கு நாங்கள் செய்யும் 
நன்றி  ஒன்று தான் 
நமது நாடு நமது மக்கள் 
என்று சொல்லுவோம் !

நல்லவராய் சாதி மதச் 
சண்டை  நீங்கியே 
நாடு போற்ற ஒன்றுபட்டு- நாங்கள் 
வாழ்ந்து  கட்டுவோம் !!


  
   

No comments:

Post a Comment