Friday, October 22, 2010

மாவீரன் நேதாஜி !

வெற்றி வெற்றி என்ற சொல்லை
விரதமாகக் கொண்டதாலே
தோல்வி என்ற வார்த்தைகளை
தோல்வியுறச் செய்தவன் !

காங்கிரசில் எத்தனையோ
கருத்து மோதல் இருந்தபோதும்
கவலையின்றி முழக்கமிட்டு
கம்பீரமாய் நின்றவன் !

ஜனநாயக நெறிமுறையை
அன்றைக்கே சொன்னவன் -ஆம்
ஜனநாயக வழியினிலே
வெற்றி முழக்கமிட்டவன் !

வெற்றி என்ற சொல்லை மட்டும்
விரதமாகக் கொண்டதாலே
தோல்வி என்ற வார்த்தைகளை
துடைத்தெறியச் செய்தவன் !

ஐ என் ஏ என்ற சொல்லால் 
ஆதிக்க வெறியர்களை 
ஆட்டம் காண வைத்திட்ட
ஆற்றல்மிகு தளபதியே !

ஆம் !
நேதாஜி என்று சொன்னால் 
வீரம்தான் நினைவில் வரும் 
உன் உருவத்தைப் பார்த்தாலே 
உணர்ச்சிகள்தான் பொங்கி வரும் !

எழுச்சிமிக்க இளைஞர்களை      
உருவாக்கித் தந்ததாலே
எழுச்சியோடு இன்னமுந்தான்
நெஞ்சமெல்லாம் வாழ்கிறார் !

சாதி மத  பேதங்களை
சாக்கடைக்குள் எரிந்ததாலே
சாகசங்கள் செய்து இன்னும்
சாதனையாய் நிற்கிறார் !

தேச விடுதலைக்கு குரல் கொடுத்து
போர் முழக்கம் செய்தபோது
மென்மையான பெண்களையும்
வீர முழக்கமிட வைத்தவர் !

ஜான்சிராணி படையினிலே
தளபதியாய் முழக்கமிட்ட
வீரத்தாய் லட்சுமிசேகல் 
வாழும் நாட்டில் வாழ்கிறோம் !

நேதாஜி ! நீ 
வெள்ளையனை மிரள வைத்த 
சிம்ம சொப்பனம் !
வேறுபாட்டை ஓட வைத்த 
எங்கள் தேச அர்ப்பணம் !!

உன் உரத்த வார்த்தையெல்லாம் 
இன்னும்   கேட்குது !
உந்தன் பேரைச் சொன்னாலே 
வீரம்   பிறக்குது !! 

தலைவா !
உங்களுக்கு நாங்கள் செய்யும் 
நன்றி  ஒன்று தான் 
நமது நாடு நமது மக்கள் 
என்று சொல்லுவோம் !

நல்லவராய் சாதி மதச் 
சண்டை  நீங்கியே 
நாடு போற்ற ஒன்றுபட்டு- நாங்கள் 
வாழ்ந்து  கட்டுவோம் !!


  
   

Sunday, October 17, 2010

அண்ணல் காந்தியின் எண்ணங்கள்

இனிய கீதை குரான் பைபிள் எதனை நோக்கினும்
இறைவன் ஒன்று என்றுதானே எனக்கு தோன்றுது
இறைவன் என்பான் மேலுமில்லை கீழுமில்லையே
இருப்பதெல்லாம்  உங்களது இதயத்தில் தானே !

மதங்களெல்லாம் சரிசமமே என்று எண்ணினால்
மனங்களெல்லாம் உயர்ந்ததென்று என்றும் சொல்லுவேன்
மனிதனாகப் பிறந்த எவரும் செய்யும் சேவையில்
மகிழ்வுடனே இறைவனைத்தான் காண நினைக்கிறேன்

எப்படியோ சுதந்திரந்தான் அடைந்தோம் என்று நீ
எல்லாக் காரியமும் நடந்திடவே அரசினைத்தானே
எதிர்பார்ப்பதுடன் குறைகளையும் சொல்லுவ தெல்லாம்
எதற்கும் நாமே லாயக்கில்லை என்பதேயாகும் !

பலம் நிறைந்த மனிதனுக்கும் பலம் குறைந்த மனிதனுக்கும்
பாரபட்ச மின்றி சம வாய்ப்பளிக்கும் அரசுதான்
பாரதத்தின் உண்மையான மக்களரசு என்று
பாரெலாமே கேட்டிடத்தான் உரக்க நானும் சொல்லுவேன்

தேச சொத்தை வீணடிக்க உரிமை நமக்கு இல்லையே
தேசம் உயர சிக்கனத்தை கற்றுக்கொள்ள வேண்டுமே
தெளிவுடனே உங்கள் உள்ளம் என்றும் இருந்தால்
தேச பக்தரென்று உங்களைத்தான் சொல்லிடலாமே !

ஆயுதங்கள் ஏந்திடாமல் அகிம்சை வழியிலே
ஆங்கிலேயனை எதிர்த்து போர் புரிந்தான்
ஆயிரங்கள் இன்னலுற்று விடுதலை பெற்றார்
ஆதலாலே அண்ணலை நாம் தந்தை என்கிறோம் !

அண்ணல் காந்தி சொல்லிவைத்த பாதையில் சென்று
அர்த்தமுள்ள மனிதனாக வாழ்ந்திடு வோமே
அனைவரையும் நம்மவராய் எண்ணிடுவோம் -தேசம்
அமைதி காண என்றுந்தானே உழைத்திடுவோமே !!